மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழக கட்டட நிதிக்கு வெள்ளி 1 லட்சம் நன்கொடை வழங்கினார் ஓம்ஸ் பா.தியாகராஜன்

சிலாண்டார், ஜன. 1-
கடந்த சனிக்கிழமை சிலாண்டார், டேவாண் ஹாங் கஸ்தூரி மண்டபத்தில் மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழகம் ஏற்பாட்டில் போர்க்கலையின் வளர்ச்சி நிதிக்கான விருந்தோம்பல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்வாழ்த்து, போர்க்கலை பாடல், இறைவாழ்த்து பாடலுக்கு பிறகு நடனமணியின் நடனம் நடைபெற்றது. தொடர்ந்து ஏற்பாட்டுக்குழு செயலாளர் வரவேற்புரையாற்றினார்.தொடர்ந்து நிகழ்வில் அதி மஹா ருத்ரவீரன் கிரண்ட் மாஸ்டர் என். முரளிதரன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வுக்குச் சிறப்பு வருகை புரிந்த ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில் நமது இந்திய சமூதாயத்தின் கலை, கலாச்சாரம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும். சமையல்கலை, ஆடல்கலை, பாடல்களை நமது எதிர்கால சந்ததியர்களுக்கு புகுத்தவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து ஏற்பாட்டுக்குழுவை வெகுவாக பாராட்டி ஏற்பாட்டுக்குழுவின் சொந்த கட்டட நிதிக்கு வெள்ளி 1 லட்சம் நன்கொடை வழங்கினார் .
இந்நிகழ்வின் ஆடல், பாடல் வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து விருந்தோம்பல் நடைபெற்றது.இந்நிகழ்வில் திருநாவுக்கரசர், ஞானசேகரன், லோகா, ஜெயசங்கர் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு சிறப்புச் செய்யப்பட்டது.