ஈப்போவில் திருப்புகழ் சபை நிறுவ உதவிகள் வழங்கப்படும்

ஈப்போ, ஜன. 3-
அண்மையில் நடந்து முடிந்த தமிழராய்ச்சி மாநாட்டில் ஒரு பிரமுகர் இந்து சனாதனம் பற்றி இழிவாக மதிப்பீடு செய்தபோது குறுக்கிட்டு பேச நினைத்தபோது நான் கூற வந்த கருத்தை மறந்துவிட்டு வேறு விசயம் குறித்து பேசி விட்டேன். நான் கூற வந்த கருத்தை இப்பொழுது கூறவுள்ளேன். இவ்வுலகில் பக்தி இலக்கியம்தான் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டு செய்துள்ளதை அனைவரும் உணருதல் அவசியம் என்று மலேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இங்கு நடைபெற்ற அருணகிரிநாதர் நிறைவுவிழாவில் கலந்துகொண்ட போது கூறினார்.

இன்று தமிழ்மொழி இவ்வுலகில் சிறந்து விளங்குவதற்கு உன்னத காரணம் பக்தி இலக்கியம் என்றால் மிகையாகாது. ஒரு காவியத்திற்கு கம்பராமாயணம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்துள்ளது என்று அறிகிறோம். அதுபோலவே, சங்கத்தமிழ் வளர்ச்சிக்கு அருணகிரிநாதர் பாடல்கள் முக்கியமாக அமைந்துள்ளன. அத்தகைய மாமனிதருக்கு விழா எடுத்து செய்வது பெருமைக்குரிய விசயமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஈப்போவில் திருப்புகழ் சபை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு முழு ஆதரவும் உதவிகலும் செய்து தரப்படும். ஈப்போ அருணகிரிநாதர் மன்றம் டாக்டர் வ.ஜெயபாலன் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. இவர்களின் இத்தகைய ஆன்மீக தமிழ்மொழி பணி என்றென்றும் சிறப்பாக தொடர வேண்டும் என்று அவர் கருத்துரைத்தார்.

இந்நாட்டு இந்தியர்களின் உருமாற்றுத் திட்டத்திற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். தற்போது புதிய அமைச்சில் சேவையாற்றி வருகிறேன். இத்துறையின் வாயிலாக அனுதினமும் அதிகமான எண்ணிக்கையில் பல இன மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண நல்லதொரு வாய்ப்பாக இருந்து வருகிறது. என் தந்தையார் பினாங்கு தண்ணீர்மலை முருகன் ஆலயத்திற்கு சேவையாற்றியவர். அவரை தொடர்ந்து தற்போது நான் மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிட்டியதற்கு இறைவனுக்கு நன்றி.

இங்கு நடைபெற்று வரும் அமுதம் வகுப்பு என்பது ஓர் உருமாற்றுத் திட்டம் என்பதாகும். இம்மாதிரியான திட்டங்கள் வாயிலாக நல்லதொரு சிறந்த பண்புடைய இளைஞர்களை உருவாக்க முடியும். அதன் அடிப்படையில் மலேசிய அருணகிரிநாதர் மன்றத்திற்கு நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

இந்நாட்டு இந்தியர்கள் ஒவ்வொரு வரும் சான்றோராக உருவாக்கப்பட வேண்டும். அதுதான் என்னுடைய கனவு என்று துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தம் கருத்தை பதிவு செய்தார்